விரயமாகும் நீரை தேக்கி வைத்து தமிழ்நாடிற்கு தண்ணீர் தரதான் மேகதாது அணை கட்ட முயற்சிப்பதாக கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மேட்டூர் நீரை கொண்டு சாகுபடியை தொடங்கிய விவசாயிகள் விளைவித்த பயிரை காப்பாற்ற முடியுமா, இல்லை விளைநிலத்தோடு பயிர்கள் காய்ந்து போகுமா என அச்சத்தில் உள்ளனர், மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென குறைந்த நிலையில், கர்நாடக அரசு தரவேண்டிய நீரை தந்தால் தான் பயிர்களை காப்பாற்ற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஒவ்வொரு மாதமும் நீர் பங்கீடை தராமல் கர்நாடக அரசு அடம்பிடிக்கிறது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் என காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு ஏற்கனவே கட்டிய அணைகளில் நீரை தேக்கி வைத்துக்கொண்டு எங்களுக்கே அந்த நீர் போதாது எனச் சொல்லிக்கொண்டு இருக்கிறது அம்மாநில அரசு. இது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் தலையிட்டு நீர் வழங்க உத்தரவிட்ட போதும் கர்நாடக அரசு நீரை திறந்துவிடாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், காவிரி நீர் மற்றும் மேகதாது விவகாரம் குறித்து அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:
தற்போது வறட்சி காலத்தில் இரு மாநிலத்தின் இடையே பிரச்னை வேண்டாம். போதுமான மழை பெய்தால் தேவையான நீர் வெளியேற்றப்படும். கடந்த வருடம் 400டி.எம்.சி உபரி நீர் கடலுக்கு சென்றதால், மேகதாது அணை இருந்தால் அந்த நீர் தேக்கி வைத்து தற்போது தமிழ்நாட்டிற்கு வழங்கி இருக்க முடியும். உங்கள் நலனுக்காக மேகதாது அணை கட்ட ஒப்புக் கொள்ளுங்கள். தற்போது, தமிழகத்திற்கு 10டி.எம்.சி தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது.
இவ்வாறு கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.







