ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் ட்வீட் செய்ததால் கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாரிதாஸ் தனது யூடியூப் சேனல் மூலமாக தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களையும், பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாகவும் பேசிவருவதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவரை கைது செய்ய கோரி பலரும் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி மரணம் தொடர்பாக யூடியூபர் மாரிதாஸ் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து பதிவிட்டார். ‘திமுக ஆட்சியில் தமிழ்நாடு இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா ?’ என்ற கருத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இக்கருத்து பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர் மதுரையில் கைது செய்யப்பட்டார். ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக அவதூறு கருத்தை யாரும் பதிவிடக்கூடாது என்று தமிழ்நாடு காவல்துறை முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடதக்கது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மாரிதாஸ் மீதான கைது நடவடிக்கையை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் மதுரை மாவட்ட பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு போலி இமெயில் அனுப்பியது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மாரிதாஸ் மீது புகார் அளித்தது. இந்த வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.