மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை மற்றும் மாநிலங்களவை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்தது தொடர்பான காணொலி ஒன்று நேற்று முன்தினம் வெளியானது. இந்நிலையில்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் மணிப்பூர் பிரச்னையை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் முதல் நாளிலேயே முடங்கின.
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று மக்களவை தொடங்கியதும் மணிப்பூர் பிரச்னையை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை தொடங்கியதும் மீண்டும் எதிர்க்கட்சிகள் பிரதமர் பதிலளிக்க வலியுறுத்தி முழுக்கமிட்டதால், அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து மக்களவை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதேபோல் மாநிலங்களவையிலும் இப்பிரச்னையை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து அவை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2 மணிக்கு அவை கூடியதும், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் வீடியோ விவகாரத்தை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர். இதனை அடுத்து, மாநிலங்களவையும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.