பிரிட்டிஷ் விமானத்தில் ஜன்னல் சீட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்து விட்டு ஜன்னலே இல்லாத சீட் அளித்ததாக கூறி பயணி ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பயணம் என்றாலே அனைவரது முதல் விருப்பமும் ஜன்னல் ஓர இருக்கை தான். இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டே பயணம் செய்வது என்பதே அலாதிதான். அதுவும் விமானப் பயணம் என்றால் சொல்லவா வேண்டும். சில போக்குவரத்துகளில் ஜன்னல் சீட்டுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
அந்த வகையில், அனிருத் மிட்டல் என்பவர் பிரிட்டிஷ் விமான நிறுவனத்தில் பயணம் செய்தார். அப்போது, அவர் ஜன்னல் சீட்டுக்காக கூடுதல் பணத்தையும் செலுத்தியிருந்தார். ஜன்னல் இருக்கையில் அமர்ந்துகொண்டு ஃபிளைட் டேக் ஆஃப் ஆகும் போதும், லேண்ட் ஆகும் போதும் லண்டனின் அழகை ரசிப்பதற்காக விமானத்தில் ஏறிய அனிருத் தனது இருக்கையைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். இருக்கை எண், விமான எண் எல்லாமே சரியாகத் தான் இருந்தது. ஆனால், ஜன்னல் தான் இல்லை. இதனால், அனிருத் மிகவும் சோகமடைந்தார்.
கூடுதல் கட்டணம் செலுத்தியும் ஜன்னல் இருக்கை கிடைக்காததால், அந்த விண்டோ சீட்டை புகைப்படம் எடுத்து, பிரிட்டிஷ் விமான நிறுவனத்திற்கு ட்வீட் போட்டிருந்தார். அந்தப் பதிவில், ஃபிளைட் லேண்டாகும் போது பூமியின் அழகை கண்டு ரசிப்பதற்காக வலதுபுற ஜன்னல் இருக்கைக்கு கூடுதல் கட்டணம் செலுத்தியிருந்தேன். எனது சீட்டின் விண்டோ எங்கே என கேள்வி கேட்டிருந்தார்.
இந்த ட்வீட் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ட்வீட்டிற்கு பலரும் பதிலளித்தும், சேர் செய்தும் வருகின்றனர்.
-ம.பவித்ரா








