ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூ. 15 லட்சம் வரை இழந்த இளைஞர் தூக்கிட்டு
உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைன் ரம்மிக்கு அரசு தடைவிதிக்க ஆவன செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை போரூர் விக்னேஸ்வரா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்
வசித்து வருபவர் பிரபு (39). இவரது மனைவி ஜனனி (எ) இந்து (36). பிரபு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கொரோனா காலத்தில் நிறுவனத்தில் வேலை பறிபோன நிலையில் கடந்த ஒரு வருடமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். அதேசமயத்தில் செல்போனில் அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடுவார் எனக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், நேற்று அவரது மனைவி வெளியே சென்றுவிட்டு இரவு
வீட்டிற்கு வந்து பார்த்தபோது பிரபு தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது
கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போரூர் போலீஸருக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார்,
பிரபுவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர்.
இதில், பிரபு ஆன்லைனில் ரம்மி விளையாட்டில் ரூ. 15 லட்சம் வரை பணத்தை
இழந்துள்ளார். கடந்த ஒரு வருடமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும், கிரெடிட் கார்டு மூலமாக கடன் பெற்றும், வீட்டுக் கடனை அடைக்க வைத்திருந்த பணம் என அனைத்தையும் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சுமார் 15 லட்சம் வரை இழந்துள்ளார்.
இதுகுறித்து அவரது மனைவிக்கு தெரியவரவே அவர் வாங்கிய கடனை அடைக்க வங்கியிலிருந்து அழுத்தம் கொடுத்ததால், அந்த பணத்தை செலுத்திவிட்டு வருவதற்காக நேற்று வங்கிக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, பிரபு உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, வேலைக்கும் செல்லாமல் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதால் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, பிரபுவின் மனைவி போரூர் போலீஸில் புகார் அளித்துவிட்டு இதுபோன்ற ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் எனத்
தெரிவித்துள்ளார்.