மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுநருக்கு பதிலாக பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் மம்தா பானர்ஜி நியமிக்கப்படுவதற்கு அனுமதி அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் ஆளுநராக உள்ள ஜெகதீப் தன்கருக்கும் இவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை தொடர்ந்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சரை நியமிக்க மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் நடவடிக்கை எடுத்தார்.
இதன் பலனாக அந்த மாநில சட்டசபையில் முதலமைச்சரை பல்கலைக்கழக வேந்தராக நியமிப்பதற்கு கடந்த 13ம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது.
மேற்கு வங்கத்தில் தற்போதை நிலை என்ன?
மாநில சட்டசபையில் மேற்கு வங்க பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்த) மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், மேற்கு வங்க ஆளுநர் அந்த மாநில பல்கலைக்கழகங்களில் வேந்தராக செயல்படுவதற்கு மாற்றாக, மாநில முதலமைச்சர் வேந்தராக பொறுப்பு வகிப்பார்.
இதில் முரண் என்னவென்றால் இந்த மசோதாவுக்கு அந்த மாநில ஆளுநர் தன்கர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒருவேளை அந்த மசோதாவுக்கு ஆளுநர் தன்கர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், இதுதொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஆளுநர் தன்கர் என்ன செய்வார்?
மாநில ஆளுநர் தன்கர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம் அல்லது மசோதாவை நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளது. அல்லது அந்த மசோதாவை மறு பரிசீலனை செய்வதற்காக திருப்பியும் அனுப்பலாம். அதேநேரம், அந்த மசோதாவை திருத்தியோ அல்லது திருத்தாமலோ சட்டசபை திருப்பி அனுப்பிவிட்டால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்குவதைத் தவிர வேறு வழியில்லை.
வேறு ஒரு வழியும் ஆளுநருக்கு உள்ளது. அவர் குடியரசுத் தலைவருக்கு அந்த மசோதாவை அனுப்பி வைக்கலாம். குடியரசுத் தலைவர் அந்த மசோதாவை மீண்டும் மறுபரிசீலனை செய்யுமாறு சட்டசபைக்கு அனுப்பி வைக்க ஆளுநருக்கு உத்தரவிடலாம்.
மறுபடியும் சட்டசபை அந்த மசோதாவை திருத்தியோ அல்லது திருத்தாமலோ திருப்பி அனுப்பி வைக்க வாய்ப்புள்ளது. அதேபோல், குடியரசுத் தலைவர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தவும் அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது.
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநருக்கு இருக்கும் அதிகாரங்கள்
ஒரு மாநில ஆளுநருக்கு பல்கலைக்கழக வேந்தராக அந்த மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது. மேலும், மாநில பல்கலைக்கழகங்களின் முடிவு எடுக்கும் குழுவுக்கு நியமனங்களை செய்யும் அதிகாரமும் வேந்தருக்கே உண்டு.
பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை தாங்கும் அதிகாரமும் வேந்தருக்கு இருக்கிறது. தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. குஜராத் பல்கலைக்கழக சட்டம் 1949-இன் படி, துணை வேந்தர்களை அந்த மாநில அரசு தான் நியமிக்க முடியும்.
தெலங்கானா பல்கலைக்கழக சட்டம், 1991 இன் படி, தேடல் குழு 3 பேர் கொண்ட குழுவை அமைக்கும். அவர்கள் அளிக்கும் பரிந்துரைப்படி, துணை வேந்தர்கள் நியமிக்கப்படுவார்கள்.
-மணிகண்டன்