கோவை மாவட்டம், சிறுமுகை வனச் சரகத்திற்குட்பட்ட மோதூர் வனப் பகுதியில் ஆண் யானை உயிரிழந்துள்ளது குறித்து வனத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் சிறுமுகை வனச் சரகத்திற்குட்பட்ட மோதூர் வனப் பகுதியில் சிறுமுகை வனத் துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியான பெத்திகுட்டை பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து வனத் துறை உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் உயிரிழந்தது சுமார் எட்டு வயது மதிக்கத்தக்க யானை என்பதும், இறந்து இரண்டு நாட்களுக்கு மேலாகி இருக்கலாம் என்பதும் தெரியவந்தது. மேலும், மாலை நேரம் ஆனதாலும், மற்ற யானைகளின் நடமாட்டம் இருப்பதாலும் யானையின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் எனவும், அதன் பின்னரே யானையின் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியான பெத்திகுட்டை பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ள நிலையில் அவ்வப்போது யானைகள் நோய்வாய்ப்பட்டு உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது.
-ம.பவித்ரா