தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக தமிழக அரசின் மக்கள் செய்தித்தொடர்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இன்று (29.8.2022) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில், இரு முக்கிய விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி 22.05.2018 அன்று பேரணி நடத்திய மக்களின் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், தூத்துக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிகழ்ந்த பிந்தைய நிகழ்வுகள் குறித்தும் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட, நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தால் 18.05.2022 அன்று அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கை குறித்து அமைச்சரவை விரிவாக விவாதித்தது.
இந்திய காவல் பணி அலுவலர்கள் உள்ளிட்ட 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட 4 அலுவலர்கள் மீது தேவையான துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு அவை துறைகளின் பரிசீலனையில் உள்ளதை அமைச்சரவை கவனத்தில் கொண்டது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறைகள் உரிய தகுந்த நடவடிக்கை மேற்கொண்ட பின்னர், அதற்கான விபர அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைப்பதற்கு அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 22.09.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் குறித்தும், அதைத் தொடர்ந்து 05.12.2016 அன்று அவரது மரணம் வரையிலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாகவும் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதியரசர் ஆறுமுகசுவாமி விசாரணை ஆணையத்தால் 27.08.2022 அன்று அரசுக்கு அளிக்கப்பட்ட அறிக்கையும் அமைச்சரவையின் முன்வைக்கப்பட்டது.
இவ்வறிக்கை குறித்து அமைச்சரவை விரிவாக விவாதித்தது. விசாரணை ஆணையத்தின் அறிக்கையை அமைச்சரவை பரிசீலித்து, அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள V.K.சசிகலா, சிவக்குமார், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் C.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் டாக்டர் இராம மோகன ராவ் உள்ளிட்டவர்கள் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட செய்யப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய நடவடிக்கைகள் மேற்கொண்ட பின்னர், அதற்கான விபர அறிக்கையுடன், ஆணையத்தின் அறிக்கையை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கவும் அமைச்சரவை முடிவெடுத்துள்ளது,
அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சில இணையதள விளையாட்டுக்களால் ஏற்படும் சமுதாயக் கேடுகள் குறித்தும் அதுதொடர்பாக தடைச் சட்டம் கொண்டுவருதல் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இத்தகைய தடைச் சட்டங்கள் குறித்த நீதிமன்றங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையிலும், பொதுமக்கள் மற்றும் வல்லுநர்களிடமிருந்து வரப்பெற்றுள்ள ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டும், இதுபோன்ற விளையாட்டுக்களை தடை செய்வது குறித்த சட்ட வரைவினை வகுத்தல் குறித்தும், அதில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த வகை விளையாட்டுக்களை தடை செய்வதற்காக அவசரச் சட்டம் கொண்டுவரப்பட உள்ள விபரமும் அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








