மகா கும்பமேளா – திரிவேணி சங்கமத்தில் நீராடிய அமித் ஷா, யோகி ஆதித்யநாத்!

மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி முதலமைச்சர் யோசி ஆதித்யநாத் ஆகியோர் நீராடினர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை  நடைபெறும் இந்த நிகழ்வு  ஜனவரி 12ஆம் தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் சந்நியாசிகள், துறவிகள், சாதுக்கள், சாத்விகள், கல்பவாசிகள், யாத்ரீகர்களை பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் நீராடி வழிபடுவார்கள். கும்பமேளா நடைபெறும் காலங்களில் திரிவேணி சங்கமத்தில் நீராடுவதை பலரும் புனிதமாக கருதுகின்றனர். இதில் சுமார் 45 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்ப பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி   உத்தரவிட்ட உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சில நாட்களுக்கு முன்பு ஹெலிகாப்டரில் சென்று  மகா கும்பமேளா நடைபெற்று வருவதை  ஆய்வு செய்தார். தொடர்ந்து நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்வில் இதுவரை 10கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசியல் தலைவர்கள்  தற்போது கும்பமேளா நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். அதன்படி இன்று (ஜன.27)  பிரயாக்ராஜ் சென்ற  உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் திரிவேணி சங்கமத்தில் நீராடினர். இவர்களுடன் சேர்ந்து ஐசிசி தலைவர் ஜெய் ஷா உள்ளிட்டோர் மகா கும்பமேளா நிகழ்வில் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.