பொள்ளாச்சி அருகே விளை நிலங்களை சேதப்படுத்திய மக்னா யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த சரளபதி பகுதியில் சுற்றித்திரிந்த மக்னா யானை இரு மாதங்களுக்கு முன்பு அங்கிருந்து வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. தென்னை, மா மரங்களை சேதப்படுத்தியும் பொதுமக்களை அச்சுறுத்தியும் வந்த மக்னா யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் கோவை மண்டல தலைமை வன பாதுகாவலரும், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனருமான ராமசுப்பிரமணியம் அப்பகுதிக்கு சென்றபோது உடனடியாக யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினர். மேலும் அடுத்த 2 அல்லது 3 தினங்களில் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
யானையின் உடல் நலம் குறித்து கண்காணிக்க வனத்துறை கால்நடை மருத்துவர்கள் நான்கு பேர் கொண்ட குழு வந்துள்ளதாகவும், மேலும் மக்னா யானையை பிடிக்க சேத்துமடையில் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் இருந்து முத்து, சுயம்பு, கபில்தேவ் ஆகிய மூன்று கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மக்னா யானையின் நடமாட்டத்தை தீவிரமாக வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் கோவை மாவட்டம், சுற்றியுள்ள பகுதிகளில் விளைநிலங்களை மக்னா யானை சேதப்படுத்தி வருவதாக மக்கள் வனத்துறையிடம் புகார் தெரிவித்தனர். மேலும் யானையை பிடிக்க வலியுறுத்தி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இன்று அதிகாலை 4 மணியளவில் பொள்ளாச்சி அருகே மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. மேலும் மக்னா யானையை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சின்னகல்லார் வனப்பகுதியில் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.