கோடநாடு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தடை விதித்தும், வழக்கு குறித்து 2 வாரத்தில் பதிலளிக்கவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 11-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில், கோடநாடு வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகவே சனாதனத்தை தாம் ஆதரிப்பதாக உதயநிதி குறிப்பிட்டிருந்தாக எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னிடம் ஒரு முறை கூட விசாரித்ததில்லை. ஊழல் புகார் கூறி திமுக தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே கோடநாடு கொலை கொள்ளை மற்றும் ஊழல் வழக்கில் தொடர்புபடுத்தி பேசியதாக கூறிய உதயநிதி 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். மேலும் தம்மை பற்றி அவதூறாக பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோடநாடு கொலை கொள்ளை மற்றும் ஊழல் வழக்குகளில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி அவதூறு கருத்துகளை வெளியிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா உத்தரவிட்டார்.
மேலும் அரசியல்கட்சியினர் அறிக்கைகள் வெளியிடுவது வழக்கம் என்றாலும், அது தனிப்பட்ட முறையில் அவதூறாக இருக்கும் போது, அதுபோல மேற்கொண்டு பேசுவதற்கு தடை விதிக்க ஆரம்பகட்ட முகாந்திரம் உள்ளது எனவும், இந்த வழக்கு குறித்து 2 வாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திலளிக்க வேண்டும் எனவும் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா உத்தரவிட்டார்.