மேகதாது அணையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றபோது பிரதமர் மோடியிடமும் இதை வலியுறுத்தினார். தமிழக அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தும் இந்தக் கோரிக்கையை வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மேகதாது பிரச்னை குறித்து பேசுவதற்காக தமிழ்நாட்டு அரசு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை இன்று கூட்டியது. அப்போது, பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டுக்கு காவிரி என்பது வாழ்வுரிமை என தெரிவித்தார்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் தமிழ்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனவும் காவிரி விவகாரத்தில் அனைத்துக்கட்சிகளும் ஒன்றுபட்ட சிந்தனையுடன் இருக்கின்றது என்பதை கர்நாடகாவுக்கு மட்டுமல்ல ஒன்றிய அரசுக்கு உணர்த்திட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் முழு உரிமை கொண்டது எனவும் மேகதாது அணையை எந்த சூழலிலும் அனுமதிக்க மாட்டோம் என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.