மாவீரன் திரைப்படத்தில் பாடல் எழுதிய அனுபவத்தை பகிர்ந்துள்ள பாடலாசிரியர் யுகபாரதி, ஒவ்வொரு பாடலும் சில சம்பவங்களை, சில அனுபவங்களை வழங்குகின்றன இப்பட பாடலும் அதற்கு விதிவிலக்கல்ல என தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. இந்த படத்தை ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 14-ம் தேதி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தது. கடந்த ஜீலை 2-ம் தேதி இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இத்திரைப்படத்தில் 2 பாடல்களை எழுதியுள்ள யுகபாரதி, தனது அனுபவத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள ‘மாவீரன்’ திரைப்படத்தில் என்னுடைய இரண்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. `வண்ணாரப்பேட்டையிலே’ எனும் பல்லவி தாங்கிய பாடலின் பெருவெற்றியைத் தொடர்ந்து ‘மாவீரா’ பாடல் தற்போது வந்துள்ளது. கதையின் காத்திரத்தை வெளிப்படுத்தும் இப்பாடலை இசையமைப்பாளர் பரத்தும், வைக்கம் விஜயலெஷ்மியும் பாடியுள்ளனர்.
இயக்குநர் மடோன் அஸ்வின் ஏற்கெனவே ‘மண்டேலா’ திரைப்படத்தின் மூலம் அறியப்பட்டவர். முதல் திரைப்படத்திற்கே தேசிய விருது பெற்ற பெருமைக்குரியவர். இயக்குநர் பிரபுசாலமனிடம் பயிற்சி பெற்றவர். நம்பிக்கைக்குரிய இளம் இயக்குநர்.
திரையில் ஒரு பாடல் ஏற்படுத்தும் அதிர்வை நன்கு உணர்ந்தவர். காட்சி மொழியை வார்த்தைகளில் வரித்திருக்கிறேன்.
`புலிசேர்ந்து போகிய கல்லளை போல / ஈன்ற வயிறோ இதுவே / தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே’ என்பார் காவற்பெண்டு. வீரமகனைப் பெற்ற தாயின் பெருமிதம் ஒருபக்கமென்றால், அந்த வீரனின் மனம் எப்படி அமைந்திருக்கிறதென்று இப்பாடலில் எழுதிப் பார்த்திருக்கிறேன். முரசமிட்டு போருக்கு அழைக்கும் களப்பாடலின் தன்மையை ஓரளவு காட்டியிருக்கிறேன்.
ஒவ்வொரு பாடலும் சில சம்பவங்களை, சில அனுபவங்களை வழங்குகின்றன. இப்பாடலும் அதற்கு விதிவிலக்கல்ல. அடுத்த வாரம் படம் திரைக்கு வருகிறது.
பாடல் இணைப்பை பின்னூட்டத்தில் தந்திருக்கிறேன். மகிழ்ச்சியின் பிரவாகத்தில் மனம் நீந்துகிறது. இவ்வாறு யுகபாரதி தெரிவித்துள்ளார்.