நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர், உள்ளாட்சி அமைப்புகள், மக்களாட்சியின் ஆணி வேர் என்றும், திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் உள்ளாட்சியை வலுப்படுத்த தனி கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உள்ளாட்சி தினம் மீண்டும் கொண்டாடப்படும் எனக்கூறிய அவர், நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தார். மேலும், கிராம சபைக் கூட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்த மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு 6 கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் கூறினார்.
ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நாட்களுடன் மார்ச் 22 தண்ணீர் தினத்தன்றும், நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தன்றும் கூடுதலாக இனி கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்றும், உள்ளாட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படி 10 மடங்கு உயர்த்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும், நடப்பாண்டு முதல், சிறப்பாக செயல்படக்கூடிய கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது மீண்டும் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.