தமிழ்நாட்டில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களில், நாளை ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. மற்ற மாவட்டங்களில் காலியாக உள்ள, ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவின்போது, கடைசி ஒருமணி நேரத்தின்போது, அதாவது மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பாதுகாப்பு உடைகள் அணிந்து வந்து வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையே, வாக்குப்பதிவுக்குத் தேவையான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள், அழியாத மை உள்ளிட்ட பொருட்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில், மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 78 பதவியிடங்களுக்கும், ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 755 பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இது தவிர, ஆயிரத்து 577 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 12 ஆயிரத்து 252 பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக, 40-ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.