கிருஷ்ணகிரி அருகே ராணுவ வீரர் கொலை வழக்கை அரசியல் கண்ணோட்டத்தோடு சமூகவலைதளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் காண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த வேலம்பட்டி எம்.ஜி.ஆர்.நகர்
பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (50). இவர் நாகோஜனஹள்ளி பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான
பிரபாகரன் (30), பிரபு (29) ஆகிய இருவரும் இந்திய ராணுவத் துறையில் பணிபுரிந்து
வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபாகரனின் மனைவி
பிரியா தெருவில் உள்ள ஊராட்சி பொது தண்ணீர் தொட்டியின் முன்பு துணி
துவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த கவுன்சிலர் சின்னசாமி இது பொது
தண்ணீர் தொட்டி இதில் துணி துவைக்க கூடாது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதில், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர்
அருகிலிருந்தவர்கள் சமரசம் செய்து அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், பிரபாகரன் கவுன்சிலர் சின்னசாமியை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில், ஆந்திரமடைந்த கவுன்சிலர் சின்னசாமி தனது உறவினர்கள் 10-க்கும்
மேற்பட்டோருடன் சென்று பிரபாகரனை தாக்கியுள்ளனர். இதனை தடுக்க சென்ற அவரின் தம்பி பிரபுவையும் கற்கள் மற்றும் இரும்பு ஆயுதங்களால்
தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த பிரபு ஓசூரில் உள்ள தனியார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலயில் நேற்று சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தார்.
முதலில் அடிதடி வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நாகரசம்பட்டி போலீசார் தற்போது அதை கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். மேலும், தகராறு சம்பந்தமாக கவுன்சிலர் சின்னசாமி, ஆயுதப் படை காவலர் குருசூர்யமூர்த்தி,
மாதையன், மணிகண்டன், வேடியப்பன், ராஜபாண்டி, குணாநிதி, காளியப்பன், புலிபாண்டி ஆகிய 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாக்கூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த
வழக்கில் சம்பந்தப்பட்ட பேரூராட்சி கவுன்சிலர் சின்னசாமி உட்பட 9 பேர் கைது
செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தில் அரசியல் உள்நோக்கம் இல்லை,
மோதிக்கொண்ட இரு குழுவினரும் நெருங்கிய உறவினர்கள் ஆவர்.
அரசியல் பிரச்னை எதுவும் இல்லை. ஆனால் இந்த சம்பவத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன. சமூக வலைதளங்களில் வதந்தியையும் பரப்பி வருகின்றனர். அப்படி வதந்தி பரப்புவோர் மீது காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கிருஷ்ணகிரி மாவட்ட நாகரசம்பட்டி காவல் நிலைய பகுதியில் ராணுவ வீரர் பிரபு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் pic.twitter.com/pPHQvCoTgY
— krishnagiri district police (@krishnagirismc) February 15, 2023
-ம.பவித்ரா