கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், இந்நிகழ்வு குறித்தும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் சரயு, நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள உணவகத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் வெடித்து சிதறிய தீப்பிழம்புகள் உணவகத்தின் அருகில் உள்ள பட்டாசு குடோனுக்கும் பரவியிருக்கிறது. இதில் அங்கிருந்த பட்டாசுகளில் தீ பற்றவே அவை வெடித்து சிதறியிருக்கின்றன. அதோடு வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் 3 வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின. உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களும் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர்.இந்த விபத்தில், பட்டாசு கடை உரிமையாளர் ரவி, மகள் ருத்திகா, மகன் ருத்தீஷ், உணவக உரிமையாளர் ராஜேஸ்வரி, இம்ரான், இப்ராஹிம் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் பட்டாசு குடோன் வைக்க அனுமதி அளித்தது எப்படி என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்னர். விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் சரயு, காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மளமளவென பற்றி எரிந்த தீயை, தீயணைப்புத்துறையினர் போராடி அணைத்தனர். கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இது குறித்து களத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சரயு, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
முதற்கட்ட விசாரணையில் பட்டாசு குடோன் லைசன்ஸ் பெற்றே இயங்கி வந்துள்ளது தெரியவந்துள்ளது. வெடி விபத்தில் சிக்கியவர்கள் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றோம். முழு இடிபாடுகளையும் அகற்றினால் தான் உள்ளே எத்தனை பேர் சிக்கியுள்ளனர், உயிரிழந்தது எத்தனை பேர் என தெரியவரும். படுகாயம் அடைந்தவர்களை துரிதமாக மருத்துவமனையில் சேர்க்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதோடு விபத்து நடந்த இடத்தில் போலீசாரையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தியுள்ளோம். உணவகமும், பட்டாசு குடோனும் அருகருகே இருந்ததே பெரும் விபத்து நடக்க முக்கிய காரணம். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சரயு கூறினார்.
மாவட்ட ஆட்சியர் அளித்த பேட்டியை கீழ்காணும் காணொலியில் காணலாம்: