புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பு வழக்கு சமரச மையம் விசாரிக்க வேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பை பி.எஸ்.டி நிறுவனம் தரமற்ற முறையில் கட்டியதாக தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட வீடுகள் தரமற்றவையாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இங்கு முதல் பகுதி குடியிருப்பானது 112.16 கோடி ரூபாய் செலவில் ஒன்பது அடுக்குகளை 864 வீடுகளைக் கொண்டுள்ளது. இன்னொரு பிரிவில் 139.13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 1,056 வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் தரமற்றதாக உள்ளதாக புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து ஐஐடி குழு ஆய்வு செய்து அறிக்கை அளித்தது. அதில், தரமற்ற வகையில் குடியிருப்பைக் கட்டிய பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனத்தை தடை பட்டியலில் சேர்க்கவும், அந்த நிறுவனத்திற்கு இனி அரசு ஒப்பந்தங்கள் வழங்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இந்நிறுவனத்தை ஏன் தடை பட்டியளில் சேர்க்கக்கூடாது என்றும் கேள்வியெழுப்பி விளக்கமளிக்க உத்தரவிட்டது.
இந்த நோட்டீஸை எதிர்த்து நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற வழக்கு விசாரணையில், சம்பந்தப்பட்ட குடியிருப்பில் 93 சதவிகித பணிகள் நிறைவடைந்துவிட்டதாக தெரிவித்தது. இதனை ஏற்ற நீதிமன்றம் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நோட்டீசுக்கு இடைக்காலத்தடை விதித்தது.
இதனையடுத்து இன்றைய விசாரணையில், நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம்படி இந்த விவகாரம் சமரச மையத்தில் தீர்த்துக்கொள்வதாக வாழ்விட மேம்பாட்டு வாரியம் மனுவில் தெரிவித்திருந்தது.
வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கோரிக்கையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மறுத்துள்ளார். மேலும் இந்த வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.