பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடரஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 45-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன. பஞ்சாப் அணியில், மயங்க் அகர்வால், பேபியன் ஆலன், ஷாருக்கான் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். கொல்கத்தா அணியில் டிம் ஷீபெர்ட், ஷிவம் மாவி சேர்க்கப்பட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கே.எல் ராகுல், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால், கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். வழக்கம்போல வெங்கடேஷ் அதிரடியில் மிரட்ட, சுப்மன் கில் 7 ரன்களில் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் போல்டானார். அடுத்து வெங்கடேஷுடன் இணைந்த ராகுல் திரிபாதி வழக்கம்போல் அதிரடி காட்ட, ஸ்கோர் மளமளவென ஏறியது.
26 பந்தில் 34 ரன் எடுத்த நிலையில் ராகுல் திரிபாதி, பிஷ்னோய் பந்துவீச்சில் ஹூடாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து நிதிஷ் ராணா, வெங்கடேஷுடன் இணைந்தார். அவரும் பஞ்சாப்பின் பந்துவீச்சை விளாச, ஸ்கோர் உயர்ந்தது. அணியில் ஸ்கோர் 120 ஆக இருந்தபோது வெங்கடேஷ், பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 49 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார்.
பின்னர் கேப்டன் மோர்கன், வழக்கம்போல 2 ரன்களில் வெளியேற, தினேஷ் கார்த்திக்கும் டிம் ஷீபெர்ட்டும் ஆடினர். டிம் ரன் அவுட் ஆக, அடுத்து சுனில் நரேன் வந்தார். நிர்ணயிக்கப் பட்ட 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. தினேஷ் கார்த்திக் 11 ரன் எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். நரேன் 3 ரன்களுடன் களத்தில் இருந்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும் பிஷ்னோய் 2 விக்கெட்டுகளையும் ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து பஞ்சாப் அணி களமிறங்கியுள்ளது.