பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றிபெற்றது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன.
அந்த வகையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 47 பந்துகளில் 57 ரன்கள் விளாசினார். கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கி விளையாடியது.
கொல்கத்தா அணிக்கு கேப்டன் நிதிஷ் ராணா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு முன்னதாக ஜேசன் ராய் 38 ரன்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார். ரஹ்மனுல்லா குர்பாஸ் 15 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 11 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தாலும், இறுதிக்கட்டத்தில் ரஸ்ஸல் 42 ரன்களும், ரிங்கு சிங் 21 ரன்களும் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் சேர்த்து கொல்கத்தா அணி வெற்றிப்பெற்றது.







