ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியான கிஷ்கிந்தா காண்டம் திரைப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
மலையாள நடிகர்களான ஆசிப் அலி மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள கிஷ்கிந்தா காண்டம் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை தின்ஜித் அய்யாதன் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

கிஷ்கிந்தா காண்டம் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பஹுல் ரமேஷ் திரைக்கதை எழுதியுள்ளார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு டோவினோ தாமஸின் ஏ.ஆர்.எம் மற்றும் ஆசிஃப் அலியின் கிஷ்கிந்தா காண்டம் ஆகிய இரண்டு படங்கள் வெளியான நிலையில் கிஷ்கிந்தா காண்டம் திரைப்படமானது விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

தேர்தலுக்கு முன்னதாக துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆயுதங்களை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும். இதன்படி ஹீரோவின் தந்தை முன்னாள் இராணுவ வீரராக இருப்பதால் அவரும் ஒப்படைப்பதற்காக துப்பாக்கியை தேடுகின்றனர். ஆனால் துப்பாக்கி காணாமல் போகவே இதற்காக புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு இப்படத்தில் ஆசிஃப் அலியின் மனைவியாக வரும் அபர்ணா பாலமுரளியை விசாரிக்க தொடங்குகின்றனர். இந்த விசாரணையின்போது அடுத்தடுத்த சில மர்மங்கள் வெளிவரத் தொடங்குகிறது. இந்த பாணியில் கதைக்களம் அமைந்துள்ளது.
இப்படம் இதுவரை ரூ.17 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்து வருகிறது. ஆசிஃப் அலி நடித்து இதற்கு முன்பு வெளியான தலவன் (thalavan), அடியோஸ் அமிகோ(adios amigo) ஆகிய படங்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியைத் தேடித் தந்தன. இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள கிஷ்கிந்தா காண்டம் திரைப்படமும் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலைக் குவித்து வெற்றி வாகை சூடி வருகிறது.







