தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்ந்து ரஜினி ஜெயிலர் படத்தை கேளர முதலமைச்சர் பினராயி விஜயனும் பார்த்து மகிழ்ந்துள்ளார்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமிழகத்தை பொறுத்தவரை 900 மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் 4000 திற்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படம் வெளியானது.
ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த “படையப்பா” திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்று இன்று வரை பேசப்படுகிறது. 24 ஆண்டுகளுக்கு பின் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஜெயிலர் படத்தில் ரஜினிக்குப் பிறகு ஷிவ ராஜ்குமாருக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது.
ஜெயிலர் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இப்படம் உலக அளவில் ரூ.150 கோடி வசூலைக் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள லூலூ மாலில், குடும்பத்துடன் சென்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று இரவு ஜெயிலர் படத்தை பார்த்து மகிழ்ந்துள்ளார். முன்னதாக இப்படத்தை பார்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின், இயக்குநர் நெல்சனை பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







