துரித உணவு வகைகளோடு, சேர்த்து சாப்பிடப்படும் முட்டை கலந்த மயோனைஸ் என்ற உணவுப் பொருளுக்கு தடைவிதித்து கேரள அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கேரளவில் நச்சு கலந்த உணவுப்பொருட்களை உண்பதால் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக கேரள அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று (ஜனவரி 12) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடைபாதை விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள், பேக்கரி மற்றும் உணவு வழங்குவோர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் வீனா ஜார்ஜ் உணவுகளில் கலக்கப்படும் சமைக்காத முட்டை கலக்கப்படும் மயோனைஸ் என்ற உணவுப் பொருளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து பேசினார்.
மேலும் சாலையோரங்களில் உள்ள கடைகளில் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றும், கடை சிறியதோ, பெரியதோ பொதுமக்களுக்கு சுத்தமான உணவுகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அரசின் இந்த முடிவுக்கு ஓத்துழைப்பு அளிப்பதாக கூட்டத்தில் கலந்துகொண்ட கேரள அடுமனை சங்கத்தினரும் உறுதி அளித்தனர்.
இதனையடுத்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில், கடந்த வாரம் மாநிலம் முழுவதும் நடைபாதை விற்பனை நிலையங்கள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அவற்றில் 60 ஹோட்டல்கள் நிரந்தரமாக மூடப்பட்ட நிலையில், 120 ஹோட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டன.
மேலும் பல ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் நடந்தப்பட்ட சோதனைகளைத் தொடர்ந்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தது. அதில் உணவகங்களில் தற்போது தயாரிக்கப்படும் உணவுகளில் அதிகமாக முட்டை கலந்த மயோனைஸ் என்ற உணவுப் பொருள் கலக்கப்படுவதும், அந்த பொருளால் அதிக உயிரிழப்புகள் மற்றும் உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் பல்வேறு பரிசோதனை முடிவுகளில் வெளிவந்துள்ளது.அதனால் மயோன்னைஸ் என்ற உணவுப்பொருளை தடை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது என்று கூறினார்.
இதனையடுத்து ஹோட்டல் உரிமையாளர்களும் தாவர எண்ணெய் அடிப்படையிலான மயோனைஸைப் பயன்படுத்த ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் கேரளாவின் பேக்கர்ஸ் அசோசியேஷன் அதிகாரி ஒருவர் பேசுகையில் சுகாதாரம் மற்றும் தரம் குறித்து பெரிய மாற்றங்களை செய்ய இருப்பதாக வீனா ஜார்ஜிடம் தெரிவித்ததாகவும், “முட்டை அடிப்படையிலான மயோனைஸைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக காய்கறி மயோனைசேவுக்கு மாற முடிவு செய்துள்ளதாகவும், தரமான உணவை வழங்க அவர்கள் உறுதிபூண்டுள்ளதாகவும் , கூறியுள்ளார்.
இந்நிலையில், துரித உணவுகள் என்று சொல்லப்படும் பர்கர்கள், சாண்ட்விச்கள், பிரஞ்சு பொரியல் மற்றும் அரபு உணவுகள் போன்ற உணவு வகைகளோடு, சேர்த்து சாப்பிடப்படும் முட்டை கலந்த மயோனைஸ் என்ற உணவுப் பொருளுக்கு தடைவிதித்து கேரள அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மயோனைஸ் என்ற உணவுப் பொருள் எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது..? அதனை சாப்பிட்டால் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும்..?
துரித உணவுகளோடு, சேர்த்து சாப்பிடும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் இந்த மயோனைஸ். இந்த பொருளை, பீசா, பர்கர், க்ரில் சிக்கன் போன்ற பல்வேறு உணவு பொருட்களோடு, சேர்த்து சாப்பிட்டு வருகின்றனர். இது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்று பலருக்கும் தெரியாது.
மயோனைஸ் செய்வதற்கு, முட்டையின் வெள்ளைக் கரு, எலுமிச்சை சாறு, உப்பு, எண்ணெய் போன்றவை தேவைப்படுகிறது. இந்த பொருட்கள் மட்டுமின்றி, கெட்டுப்போகாமல் இருப்பதற்கு, சில மூலப்பொருட்களையும், உணவகம் நடத்தி வருபவர்கள் பயன்படுத்துகின்றனர்.
பொதுவாக சமைக்கப்படாத முட்டையின் வெள்ளைக்கரு அதன் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதாகவும், அது பழுதடைந்தவுடன் குடல் அமைப்பை பாதிக்கும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் நச்சுத்தன்மையுடையதாக மாறும் என்றும் உணவு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தவிர, சமைக்காத முட்டைகளிலும் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன.
இதனை அதிக அளவில் சாப்பிடும் போது புற்றுநோய், இதய நோய், கல்லீரல் கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுமாம். மேலும் இதில் சேர்க்கப்படும் எண்ணெய் அதிக கொழுப்பு நிறைந்தது. அதாவது ஒரு ஸ்பூன் மயோனைஸ் 94 கலோரிகளைக் கொண்டதாம். எனவே இது உடலில் கலோரி அளவை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்கும் என்பதால் இது மிகவும் ஆபதனாது என்று கருதப்படுகிறது.











