விதிமுறைகளை மீறி சீனர்களுக்கு விசா வழங்கியதாக தொடக்கப்பட்ட வழக்கில், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
விதிகளை மீறி கார்த்தி சிதம்பரம் 263 சீனர்களுக்கு விசா வாங்கித் தந்ததாகவும் அதற்காக அவர் ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாகவும் சிபிஐ தில்லி பிரிவு வழக்குப்பதிவு செய்தது.
இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய சிபிஐ, அவருடைய ஆடிட்டர் பாஸ்கர் ராமனை கைது செய்தது.
இதையடுத்து, தானும் கைது செய்யப்படலாம் என்பதால், தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாக்பால் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து, கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன்மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, அவரை கைது செய்வதாக இருந்தால் 3 நாட்கள் முன்பாகவே அவருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டில் இருந்து வந்ததும் 16 மணி நேரத்தில் விசாரணையில் இணைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.








