கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா நாளை மறுநாள் பதவியேற்கவுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும்போட்டி நிலவியது.
இருவரும் டெல்லிக்குச் சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை தனித்தனியே சந்தித்துப் பேசினர். அதைத்தொடர்ந்து, ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்களுடன் மல்லிகார்ஜூன கார்கே ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த 3 நாட்களாக முதலமைச்சரை அறிவிப்பதில் இழுபறி ஏற்பட்ட நிலையில், நிலையில், இன்று காலை இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தார். ஒருமித்த கருத்துடன் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக வரும் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை டி.கே.சிவக்குமார் இருப்பார் என்றும் அவர் அறிவித்தார். மேலும், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நாளை மறுநாள் பதவியேற்பார்கள் என்றும் கே.சி.வேணுகோபால் அறிவித்தார். 
ஒருவழியாக முதலமைச்சரை முடிவு செய்துள்ள நிலையில், பெங்களூரில் இன்று இரவு 7.30 மணிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்க உள்ளதகவும் தகவல் வெளியாகியுள்ளது.









