கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு தான் காவிரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி நீர் திறந்து விடாமல் நிறுத்தப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தல் பதிவு ஒன்றை…

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி நீர் திறந்து விடாமல் நிறுத்தப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது :

“கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, இத்தனை ஆண்டுகளாக பிரச்சினை இன்றி வந்து கொண்டிருந்த காவிரி நீரைத் திறந்து விடாமல் நிறுத்தியிருக்கிறார்கள்.

காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்துப் போராடிய விவசாயிகள் சங்கத்தினரையும், தமிழ்நாடு காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

திமுக, தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்களா அல்லது கூட்டணிக் கட்சிகள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்களா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும்.

திமுகவின் கூட்டணி கட்சி என்பதால், கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டிக்காமல், மத்திய அரசின் மீது வீண்பழி சுமத்த முயல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுகவால் உருவாக்கப்பட்டு, நெடுங்காலமாக இருந்து வந்த காவிரிப் பிரச்சினைக்கு, பாரத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முயற்சியால்தான் தீர்வு கிடைத்தது. தற்போதும், தமிழ்நாடு விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

திமுக, தங்கள் தனிப்பட்ட பலன்களுக்காக, தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் நலன்களைப் பலிகொடுப்பதை எப்போது நிறுத்தும்? உடனடியாக, தமிழகத்துக்குச் சேர வேண்டிய காவிரி நீரைத் திறந்து விட கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை தமிழக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்” என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.