தென் மாவட்டங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணியினை விரைவுப்படுத்தும் முடிவில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தீவிரமாக இருக்கிறார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குலசேகரபட்டிணத்தில் ராக்கெட் தளம் அமைப்பதற்கான பணிகளை முன்னெடுத்தவர் கனிமொழி. இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ஆயிரத்து 850 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி உள்ளது. இங்கு தற்போது ராக்கெட் தளம் அமைப்பதற்கு ஏற்ற பகுதிதானா என்பதற்கான மண் பரிசோதனைகளை நடைபெற்று வருவதாக இஸ்ரோவின் தலைவர் சிவன் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்தநிலையில், இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவருமான மயில்சாமி அண்ணாதுரையுடன் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து குலசேகரபட்டிணம் ராக்கெட் தளம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது மயில்சாமி அண்ணாதுரை அமெரிக்காவில் ஹெலன் மாஸ்க் இரண்டு ஆண்டுகளில் 42 ஆயிரம் செயற்கை கோள்களை நிறுவ திட்டமிட்டுள்ளார். அதனை விட அதிகளவில் குலசேகர பட்டிணத்தில் இருந்து செயற்கைகோள்களை நம்மால் ஏவ முடியும் என கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும், இதற்கு தேவையான உதிரி பாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை இப்பகுதியில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி விமானநிலையம், ராக்கெட் உதிரி பாகங்களை இணைத்து அதனை நிர்வகிக்கும் மகேந்திரகிரி போன்றவை அருகில் இருப்பது, இந்த தொழிற்சாலைகள் வருவதற்கு ஏதுவான அம்சங்கள் என அவர் கூறியுள்ளார். ஏவுதள உதிரி பாகங்கள் தயாரிக்க உள்ளூர் தொழில் நிறுவனங்களை பயிற்றுவிக்க உள்ள வாய்ப்புக்கள் குறித்தும், இத்திட்டம் முழுமை பெறும்போது லட்ச கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருக வழிவகை செய்யும் அவர் கூறியுள்ளார்.
அனைத்தையும் கேட்டுக்கொண்ட கனிமொழி, இதனை செயல்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும், இதில் அதிக கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கவனத்திற்கு அனைத்து விபரங்களை கொண்டு செல்வதாகவும் அவர் கூறியுள்ளார். குலசேகர பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் வரும்பட்சத்தில் தென் தமிழகத்தின் வளர்ச்சி அபரிதமாக இருக்கும் எனவும், நாங்குநேரி தொழிற்பூங்காவில் பல்வேறு ராக்கெட் ஏவுதளம் சம்பந்தபட்ட தொழிற்நிறுவனங்கள் வர வாய்ப்புள்ளது என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இராமானுஜம்.கி