2022-ல் தியேட்டரிலும், ஓ.டி.டி.யிலும் வெளிவந்த பெரும்பாலான தமிழ் படங்கள் ஆடியன்ஸை கதற வைத்துவிட்டது என்றே சொல்லலாம். அதுவும் உச்ச நட்சத்திரங்களின் படங்களான வலிமை, எதற்கும் துணிந்தவன், மாறன், மஹான், என்ன சொல்ல போகிறாய் (அட்ஜஸ் பண்ணிக்கோங்க!) போன்றவைகளும் ஆடியன்ஸின் Will power(மன உறுதி)-ஐ நன்றாக சோதித்து பார்த்தது.
இந்நிலையில் ரசிகர்களை தாண்டி ‘ஃபேமிலி ஆடியன்ஸ்’ அதிகம் எதிர்பார்த்த ‘பீஸ்ட்’ படமும் ‘வொர்ஸ்ட்’ விமர்சனங்களை பெற சோகத்தின் விளிம்புக்கே சென்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள். இன்னொரு பக்கம் பசியோடு இருப்பவர்கள் ‘பார்ஸ்ட் ஃபுட்’ கடையை கடப்பது போல கே.ஜி.எஃப், RRR போன்ற அண்டை மாநில படங்கள் தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு பட்டையை கிளப்பி வருவது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு ஏக்கத்தை கொடுத்துள்ளது. இப்படி வறண்டு போன தமிழ் சினிமாவில் வரப்பு வெட்டி நீர் பாய்ச்ச யார் வருவார்..? என சினிமா ஆர்வலர்கள் ஆவலோடு காத்திருக்க..நிற்க,
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கே.ஜி.எஃப் படத்தில் ஒரு காட்சியில், சுரங்கத்தில் நம்பிக்கை இன்றி வாழும் குழந்தைகளுக்கு கட்டுக்கதைகளை சொல்லி ஒருவர் நம்பிக்கை ஊட்டுவார். அதுபோலவே தமிழ் சினிமாவில் இதுபோல் வறட்சிகள் வரும் போதெல்லாம், “இந்நேரம் ஆண்டவர் படம் மட்டும் வந்துருந்தா..!” என தொடங்கி பல பராக்கிரம கதைகளை சொல்லி நம்பிக்கை ஊட்ட முயற்சிப்பார்கள். ஆனால் சரித்திரத்தை கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால், விஸ்வரூபம் 2, தூங்காவனம், மனமதன் அம்பு என கடந்த 10 ஆண்டுகளாக கமல் சார் தொட்ட பர்னீச்சர்களும் ஆடியன்ஸை பதம் பார்க்க தான் செய்தது. இடையில் த்ரிஷ்யம் படத்தின் மீளுருவாக்கமான ‘பாபநாசம்’ மட்டும் ஆறுதல் பரிசாக விளங்கியது. இந்நிலையில்,‘மத்த படங்கள் ஓடலைன்னா ஆண்டவர் கிட்ட போகலாம், ஆனா ஆண்டவர் படமே ஓடலைன்னா என்ன பன்றது’ எனும் அவர்களின் மைண்ட் வாய்ஸும் நமக்கு கேட்காமல் இல்லை.
இதைக் கடந்து கடைசியாக ஆண்டவர் கொடுத்த ‘ஹிட்’ என்றால் அது விஸ்வரூபம் தான். அதிலும் கூட நேட்டோ படையினர், குழந்தைகள் – பெண்களை கொல்ல மாட்டார்கள் என பீஸ்ட் மோடில் வடை…இல்லை இல்லை ‘பீட்சாவே’சுட்டிருப்பார் என்பதே அரசியல் சினிமா ஆர்வலர்களின் கருத்து. இந்நிலையில் பீஸ்டு படத்தின் ஏமாற்றத்தை தொடர்ந்து, ‘அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை கட்டினை கலட்டும் ஆத்திரக்காரா..’என்ற bgm-உடன் கமலின் விக்ரம் படத்திற்கு ஃபயர் விட்டு வருகின்றனர்.
இன்னொரு புறம் படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜின் ட்விட்டர் பதிவுகளிலும், ‘லோகி தமிழ் சினிமா மானத்த நீங்க தான் காப்பாத்தனும்’ எனக் கூறி மீம்ஸ்களை தெறிக்க விடுகின்றனர். லோகேஷ் கனகராஜின் கடந்த மூன்று படங்களுமே ஆடியன்ஸுக்கு அசராமல் விருந்து வைத்தது. அதேபோல அவரின் விக்ரம் படம் நம்மை மகிழ்விக்க தவறாது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும், ஜெய்ஹிந்த் படத்தில் வரும் கவுண்டமணி காமெடியில், தமிழ்நாட்டு மானத்தை காப்பாற்றும் பொருட்டு அவர் செய்த சாகசங்களும் அதன் விளைவுகளும் நம் முன் வந்து போகாமல் இல்லை. பொருத்திருந்து பார்ப்போம்!