மாநில கட்சிகள் எல்லாமே குடும்ப கட்சிகள் என்று பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா விமர்சித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பாஜக கருத்தரங்கில் பேசிய நட்டா, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த கட்சி தேசிய கட்சியோ, இந்தியாவுக்கான கட்சியோ, ஜனநாயக ரீதியில் இயங்கக்கூடிய கட்சியோ அல்ல என அவர் குற்றம் சாட்டினார். வாரிசு அரசியல்தான் காங்கிரசின் நடைமுறை என்ற நட்டா, தற்போது அந்த கட்சி சகோதரன்-சகோதரிக்கான கட்சியாக உள்ளதாக விமர்சித்தார்.
மாநில கட்சிகளுக்கு எந்த கொள்கையும் இல்லை என குறிப்பிட்ட நட்டா, அதிகாரத்தை கைப்பற்றவே அவை உருவாக்கப்பட்டவை என்றார். கொள்கைகள் குறித்து அந்த கட்சிகள் பேசும் என்றும் ஆனால், ஆட்சி அதிகாரத்துக்கு வந்துவிட்டால் கொள்கைகளை ஓரம்கட்டிவிட்டு வாரிசு அரசியலை நோக்கி அவை நகரும் என்றார்.
ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, பஞ்சாபில் சிரோமணி அகாலிதளம், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம், மகாராஷ்ட்ராவில் சிவ சேனா, தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஆந்திரப்பிரதேசத்தில் YSR காங்கிரஸ், தமிழ்நாட்டில் திமுக என காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மாநில கட்சிகள் அனைத்தும் குடும்ப கட்சிளே என ஜெ.பி. நட்டா குற்றம் சாட்டினார்.
இந்த கட்சிகளுக்கு கொள்கையும் இல்லை குறிக்கோளும் இல்லை என விமர்சித்த நட்டா, அதிகாரத்தின் மையத்தில் உள்ள நபர்கள் அவரவர் விருப்பப்படி கட்சியையும் ஆட்சியையும் நடத்துவதாகக் குற்றம் சாட்டினார். இந்த கட்சிகளுக்கு தேசிய நலன் மீது அக்கறை இருப்பதில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி, மாநிலங்களின் நலன்களில் போதுமான அக்கறை காட்டாததன் காரணமாகவே மாநில கட்சிகள் வளர்ச்சி பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதாகக் குறிப்பிட்ட நட்டா, தற்போது காங்கிரஸ் உள்பட வாரிசு அரசியலில் சிக்கி உள்ள அனைத்து கட்சிகளும் மூழ்கி வருவதாகக் கூறினார்.
உள்கட்சி ஜனநாயகத்தை கொண்டிருக்கக் கூடிய ஒரே கட்சி பாஜகதான் என பெருமிதம் தெரிவித்த ஜெ.பி. நட்டா, இதைப் பற்றி பேசுவதற்கான தார்மீக உரிமை தங்கள் கட்சிக்கு உள்ளதாகக் கூறினார். 18 கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக பாஜக வளர்ந்திருப்பதாகவும், கட்சியின் இந்த வளர்ச்சி, தொண்டர்களின் கடந்த 40 ஆண்டுகால உழைப்புக்குக் கிடைத்த வெற்றி என்றும் ஜெ.பி. நட்டா தெரிவித்தார்.