“எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல” – வைகோ பேட்டி!

எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.   ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி கடந்த 24 ஆம் தேதி  தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.  

ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி கடந்த 24 ஆம் தேதி  தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில்,  இன்று அதிகாலை உயிரிழந்தார்.  இந்த நிலையில், கணேசமூர்த்தியின் உடல் வைக்கப்பட்டுள்ள கோவை தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுடம் கூறியதாவது:

“சட்டமன்ற தேர்தலில் உரிய இடம் கொடுக்கப்படும் என ஈரோடு எம்.பி கணேசமூர்த்தியிடம் தெரிவிக்கப்பட்டு இருந்தது.  இரு சீட் கொடுத்தால் பரிசீலனை செய்யுங்கள் என்று அவர் கூறி இருந்தார்.  ஒரு சீட் மட்டும் கொடுத்தால் துரை நிற்கட்டும் என்று கூறினார்.  நானும், அவரும் உயிருக்கு உயிராக 50 ஆண்டாக பழகி இருக்கின்றோம்.  கொள்கையும்,  லட்சியமும் பெரிது என வாழ்ந்தவர் அவர்.  அவர் மன அழுத்ததில் இருந்ததாக என்னிடம் சொன்னார்கள்.

அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வேண்டியவர்.  இந்த முடிவிற்கு வருவார் என நினைக்க வில்லை.  பெரிய இடி தலையில் விழுந்தததை போல இருக்கிறது.  மருத்து குடித்து விட்டார் என்ற போதே எனக்கு உயிர் போய்விட்டது.  எம்.பி. சீட் கிடைக்காத்தால் அவர் இறந்தார் என்பது உண்மையல்ல.

மகனையோ, மகளையோ,  கட்சி நிர்வாகிளையோ கேட்டால் உண்மை என்ன என்பது தெரியும்.  அவர் இறந்த செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  அவர் மருந்து குடித்தார் என்ற செய்தியையே என்னால் தாங்க முடியவில்லை.  அவர் அவ்வளவு மன உறுதியும்,  துணிவும் கொண்டவர்.  அவர் எதைப் பற்றியும் கவலைப்படாதவர்.

இத்தனை ஆண்டுகளாக எந்தப் பதவியிலும் இல்லை என்பதை பற்றி கவலைப்படாதவர்.  கொங்கு மண்டல திராவிட இயக்க சரித்திரத்தில் அழியா நட்சத்திரமாக இருப்பார்.  மதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை கண்ணீரோடு தெரிவித்துக் கொள்கிறேன்.”

இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.