”யோகிகள், சன்னியாசிகள் காலில் விழுந்து வணங்குவது எனது வழக்கம்” – சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது தவறில்லை. யோகிகள், சன்னியாசிகள் காலில் விழுந்து வணங்குவது எனது வழக்கம் என நடிகர் ரஜினி விளக்கம் அளித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த…

யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது தவறில்லை. யோகிகள், சன்னியாசிகள் காலில் விழுந்து வணங்குவது எனது வழக்கம் என நடிகர் ரஜினி விளக்கம் அளித்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ம் தேதி  உலகம் முழுவதும் வெளியானது. ரஜினிகாந்த் மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்த “படையப்பா” திரைப்படம் பெரிய வரவேற்பு பெற்றது.  24 ஆண்டுகளுக்கு பின் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

மேலும், தென்னிந்திய முன்னணி நடிகர்களான மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து இந்த படம் உருவாகி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.

உலகம் முழுவதும் 7,000 திரைகளிலும் தமிழகத்தில் 1,200 திரைகளிலும் இப்படம் வெளியானது. இதனை அடுத்து, ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் ரூ.375 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்தது. தமிழ் திரையுலகில் இது ஒரு புதிய சாதனை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இமயமலை சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேசம் சென்றார்.  உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியா உடன் சேர்ந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ஜெயிலர் திரைப்படத்தை பார்த்துள்ளனர். இதனை அடுத்து லக்னோவில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசிர்வாதம் பெற்றார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து  உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் நடிகர் சாமி தரிசனம் செய்தார். இந்த நிலையில் லக்னோவில் உள்ள ராணுவ முகாமுக்கு சென்றார். இந்த முகாமில் உள்ள இராணுவத்தினரின் குடும்பத்தினருடன் அவர் உரையாடினார்.

இதன் பிறகு சூர்யா ஆடிட்டோரியத்தில் ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் உரையாற்றினார்.  தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய ராணுவத்தின் பங்களிப்பு இன்றியமையாத ஒன்று என  நன்றி தெரிவித்த அவர் தனக்கிருக்கும் ராணுவத்துடனான நெருங்கிய தொடர்பு குறித்து பேசினார்.

தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சேவையில் இருந்ததாகவும், இது தனக்கு மிகுந்த பெருமையை அளிப்பதாகவும் கூறினார்.”

இதன் பின்னர் சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளரை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..

” ஜெயிலர் திரைப்படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி. 4 ஆண்டுகளுக்கு பின் இமயமலை சென்று வந்தது மகிழ்ச்சி. யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது தவறில்லை. வயது குறைவானவராக இருந்தாலும் யோகிகள், சன்னியாசிகள் காலில் விழுந்து வணங்குவது எனது வழக்கம். நட்பு ரீதியாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரை சந்தித்தேன்” என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.