சித்த மருத்துவர்களில் வாரிசுகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான அரசு அங்கீகாரம் வழங்க கோரிய வழக்கு சுகாதாரத் துறைச் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவு
மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு. அதில், ” தமிழகத்தில் சித்தா படிப்பிற்காக 2 அரசு கல்லூரியும் 1 தனியார் கல்லூரியும் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதில் சித்த மருத்துவ படிப்பு பயின்றவர்கள் “ஏ” பிரிவு என்றும் அனுபவத்தின் மூலம் சித்தம் பயின்றவர்கள் “பி” பிரிவு எனவும் பிரிக்கப்பட்டுள்ளனர்.
சித்த மருத்துவத்தில் புதிதாக வந்த கொரோனா போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை மருந்துகள் கொடுப்பதற்கான நேரம் அளவு ஆகியவற்றை பயில்வது மிக முக்கியமான ஒன்றாகும். 1973 ஆம் ஆண்டு வரை 10 வருடங்கள் சித்த மருத்துவத்தில் பயிற்சி பெற்றால் அரசு பதிவு வழங்கப்பட்டுவந்தது. ஆனால் தற்போது பல ஆண்டுகளாக எடுத்த குறிப்புகள் தாங்கள் பயின்ற சித்த மருத்துவ குறிப்புகளை எங்களது வாரிசுகளுக்கு கற்றுக் கொடுத்து வருகிறோம். ஆனால் அவர்கள் சட்ட ரீதியாக அங்கீகாரம் பெற முடியாத சூழ்நிலை உள்ளது.
சித்த மருத்துவத்தில் அனுபவம் பெற்ற எங்களது வாரிசுகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.” என மனு செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் ஆனந்தி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது சுகாதாரத் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.







