கைதாகிறாரா தெலங்கானா முதல்வர் மகள் கவிதா? – டெல்லி மதுபான கொள்கை முறைகேடு புகாரில் அமலாக்கத்துறை விசாரணை!

தெலங்கானா முதல்வரும் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிடம், டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரில் அந்த மாநில…

தெலங்கானா முதல்வரும் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிடம், டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.


டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரில் அந்த மாநில துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோதியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே ஊழல் வழக்கில், கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதையடுத்து, கடந்த 9-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த 8ம் தேதி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த கவிதா, பெண் ஒருவரிடம் விசாரணை நடத்துவதாக இருந்தால் அவரை அவரது வீட்டில் வைத்து விசாரணை நடத்த சட்டத்தில் இடம் இருப்பதாகக் கூறி எனவே தன்னை தனது வீட்டில் வைத்து விசாரணை நடத்துமாறு கோரினார். இதை ஏற்க மறுத்த அமலாக்கத்துறை, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு தெரிவித்தது.

பின்னர், நேரில் வர ஒப்புக்கொண்ட கவிதா, மார்ச் 16ம் தேதி நேரில் ஆஜராவதாகத் தெரிவித்திருந்தார். இதை அமலாக்கத்துறை ஏற்க மறுத்ததை அடுத்து மார்ச் 11ம் தேதி நேரில் ஆஜராவதாக கவிதா தெரிவித்திருந்தார். இதை அமலாக்கத்துறை ஏற்றுக்கொண்டதை அடுத்து, இன்று அவர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான 11 பேரும் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.