திருப்பூரில், அரசு பேருந்தில், கியர் ராடுக்கு பதிலாக இரும்பு கம்பி பொருத்தி பேருந்து இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்த கடந்த மே மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுபோக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசுப் பேருந்து சேவைகளும் முழுவதுமாக இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குமுளி – திருப்பூர் இடையே இயக்கப்படும், திருப்பூர் பணிமனைக்குட்பட்ட அரசு பேருந்தின் கியர் ராடு பழுதடைந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, கியர் ராடுக்கு பதிலாக, இரும்பு குழாயை பொருத்தி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, அந்த பேருந்து இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணிக்கும் அரசு பேருந்து, இரும்பு பைப் உதவியுடன் இயக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







