கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு 132 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 15வது ஐபிஎல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா அணி இன்று மோதி வருகின்றனர். மேலும், முதல் முறை ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணி, ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பலப்பரிட்சையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸின் துவக்க ஆட்டக்காரர்களாக ருத்துராஜ் மற்றும் கான்வே களமிறங்கினர். முதல் ஓவரில் சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ருத்துராஜ் 4 பந்துகளில் ரன்கள் ஏதும் எடுக்காமல் உமேஷ் யாதவ் பந்தில் விக்கெட்டை பரிகொடுத்தார்.
பின்பு அடுத்ததாக களமிறங்கிய உத்தப்பா அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது. மறுமுனையில் கான்வே 3 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதிரடி காட்டி வந்த உத்தப்பா, வருண் சக்கரவர்த்தி பந்தி 28 ரன்களில் வெளியேற அவரை பின்தொடர்ந்து ராயுடுவும் பெரிதும் ஜொலிக்காமல் 15 ரன்களில் ஆட்டம் இழந்தார். இவர்களை அடுத்து களத்திற்கு வந்த டூபே, ரஸ்ஸல் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 1 ரன் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
இந்நிலையில், 11 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 5 விக்கெட்களை இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சென்னை அணியின் கேப்டன் ஜடேஜாவும், முன்னாள் கேப்டன் தோனியும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை கனிசமாக உயர்த்தினர். இறுதியில், 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தனர். தோனி 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். மேலும், கேப்டனான ஜடேஜா 28 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். 132 ரன்களை இலக்காக கொண்டு கொல்கத்தா அணி அடுத்ததாக களமிறங்கவுள்ளது.










