பொய்யான ஆதாரங்கள் அடிப்படையில் அமலாக்கத் துறை எனக்கு எதிராக விசாரணை நடத்தி வருகிறது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் குற்றம்சாட்டினார்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த 20 மற்றும் 27ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. எனினும், அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் சஞ்சய் ராவத் வீட்டிற்கு சென்றனர்.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் சஞ்சய் ராவத் கூறுகையில், “அரசியல் பழிவாங்கும் நோக்த்துடன் எனக்கெதிராக அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நான் எந்த ஊழலும் செய்யவில்லை. பாலாசாகேப் தாக்கரே பெயரை கூறி உறுதிமொழி எடுத்திருக்கிறேன். நான் உயிரிழந்தாலும் சரணடைய மாட்டேன். பாலாசாகேப் தாக்கரே எங்களுக்கு சண்டையிட கற்றுக் கொடுத்திருக்கிறார்” என்றார்.
பாஜக எம்எல்ஏ ராம் காதம் கூறுகையில், “அவர் ஏன் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணிக்கிறார். அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றால் அமலாக்கத் துறையைக் கண்டு ஏன் அவர் அஞ்ச வேண்டும்? செய்தியாளர்களை சந்திக்க மட்டும் அவருக்கு நேரம் உள்ளது. ஆனால், விசாரணை அமைப்பின் அலுவலகத்திற்கு செல்ல நேரமில்லையா?” என்றார்.









