சென்னையில் வரும் ஜனவரி மாதம் 16, 17, 18 ஆகிய தேதிகளில் பன்னாட்டு புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, பன்னாட்டு புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளை சார்ந்த தூதரக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சந்திப்பின் போது பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்
பொய்யாமொழி, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி 2023 ஜனவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் பன்னாட்டு புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. புத்தக கண்காட்சியில் 40
நாடுகளில் இருந்து பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.தமிழ்நாட்டில் முதல்முறையாக பன்னாட்டு புத்தக கண்காட்சி நடைபெறுகிறது.
கல்வியை மேம்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவற்றில் ஒன்றாக பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஜனவரி 16,17,18 ஆகிய தேதிகளில்
சென்னையில் நடைபெறுகிறது. தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கம் சார்பில் இரண்டு வாரம் புத்தக கண்காட்சி நடைபெறும்.
பன்னாட்டு புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ளும் நாடுகள் அவர்கள் நாட்டின்
பெருமைகள் மற்றும் சிறந்த புத்தகங்களை கண்காட்சியில் வைக்கலாம். மேலும்
புத்தகங்களை படிப்பதற்கான படிப்புரிமை குறித்தும், தமிழ் இலக்கிய புத்தகங்கள்
போன்றவற்றை மொழிபெயர்ப்பதற்கும் உதவி தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு
முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் பன்னாட்டு புத்தக கண்காட்சியில் சுமார் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் வரும் ஆண்டில் 100 நாடுகளைச் சார்ந்தவர்கள் பண்பாட்டு புத்தக கண்காட்சியில் பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 169 நாடுகள் கலந்து கொண்டன. சர்வதேச புத்தக கண்காட்சியிலும் அதே போல கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டார்.