இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பது என கூறிவிட்டு, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது, நாட்டின் பன்மைத்தன்மையை சிதைத்து விடும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சட்ட ஆணையத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
”ஒவ்வொரு மதப்பிரிவினரின் பாரம்பரியத்திற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்ட சட்டங்கள் அப்படியே தொடர வேண்டும். பல்வேறு மதப்பிரிவினரின் சிவில் உரிமைகளில் அரசு தலையிடக் கூடாது. பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இந்திய சட்ட ஆணையம் கருத்துகளைக் கேட்பதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.
பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதன் நோக்கம், அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதை விட, சில பிரிவினரின், குறிப்பாக சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்க வேண்டும் என்பதாகவே தோன்றுகிறது. இதை பொறுப்புள்ள, மதச்சார்பற்ற கட்சி என்ற முறையில் பாமகவால் ஏற்க முடியாது.
சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு அரசியல் உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அதன் காரணமாகவே பாமகவில் பொருளாளர் பதவி 30 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமியர்களுக்கும், கிறித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 47-ம் பிரிவில் மக்களின் ஊட்டச் சத்து அளவு, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றையும், பொது சுகாதாரத்தையும் மேம்படுத்துவதை அரசு முதன்மைக் கடமையாக கருத வேண்டும். அதை அரசு செய்ய வேண்டும்.
தனி சிவில் சட்டங்களால் இஸ்லாமியர்கள் மட்டும் பயனடைவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்வதே தவறாகும். பொதுசிவில் சட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான 21-ஆம் சட்ட ஆணையம் விவாதித்து பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளைக் கேட்டது. அதன் முடிவில் 185 பக்கம் கொண்ட அறிக்கை ஒன்றை 2018ம் ஆண்டில் வெளியிட்டது. அதில், இன்றைய சூழலில் பொதுசிவில் சட்டம் தேவையும் அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல என்று தெரிவித்திருந்தது.
4 ஆண்டு இடைவெளியில் பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை 22-ம் சட்ட ஆணையம் தொடங்கியிருப்பது சரியல்ல. இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் என்று கூறிவிட்டு, ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வருவது இந்தியாவின் அடையாளமான பன்மைத்தன்மையை சிதைத்து விடும்.
இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மை சமுதாயத்தினரின் உரிமைகளை பறிப்பதுடன், இந்தியாவின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பெரும் தடையாக இருக்கும் என்பதால் அதற்கான முயற்சியை சட்ட ஆணையம் கைவிட வேண்டும்” இவ்வாறு பாமக கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கடிதத்தின் மூலம் தெரிவித்திருந்தார்.