சென்னை, மதுரையில் செப்டம்பர் முதல் அரசு கருத்தரிப்பு மையங்கள்!- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் அரசு சார்பில் ரூ.5 கோடி மதிப்பில் கருத்தரிப்பு மையங்கள் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில்,…

சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் அரசு சார்பில் ரூ.5 கோடி மதிப்பில் கருத்தரிப்பு மையங்கள் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை வளாகத்தில், கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான்2022 பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.5.89 கோடி மதிப்பில் பெற்றோர் காத்திருப்பு அறை மற்றும் உணவக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். மேலும் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

”நமக்கு நாமே திட்டத்தில் மக்களின் பங்களிப்பு, தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் அரசின் பங்களிப்பு என்ற பல்வேறு அமைப்புகள் மூலம் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதிமுக ஆட்சியில் ஒரு பத்தாண்டு காலம் இந்த நடைமுறை இல்லாமல் போனது.

மீண்டும் தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்குவதற்காக புதிய அறிவிப்பை வெளியிட்டார். 2 கோடியே 25 லட்சத்து 97 ஆயிரம் ரூபாயை நிதியாக கொண்டு மீதம் உள்ள தொகையை அரசு அளித்து 5 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் இந்த கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டடத்தில் 12 குளியலறைகள், 16 கழிப்பறைகள் இரண்டு மின் தூக்கி வசதிகளோடு தரைத்தளம் மற்றும் நான்கு தளங்களுடன் அமைக்கப்பட உள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இந்த கட்டடத்தின் தரைத்தளத்தில் ஒரு சமையல் அறையோடு கூடிய ஒரு கட்டிடத்திற்கும் இடம் ஒதுக்கி இருக்கிறார்கள். மிக விரைவில் அதுவும் இங்கு கட்டப்பட இருக்கிறது.

ஃபெர்டிலிட்டி சென்டர் கருத்தரிப்பு மையங்கள் தமிழ்நாட்டில் ஏராளமாக தனியார் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அரசின் சார்பிலும் கருத்தரிப்பு மையம் அமைய வேண்டும் என்ற நிலையில் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அந்த வகையில் எழும்பூரிலும், மதுரையிலும் இரண்டு கருத்தரிப்பு மையங்கள் தொடங்கப்பட உள்ளன. 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட அந்த இரண்டு மருத்துவ கருத்தரிப்பு மையங்களும் இன்றைக்கு கட்டுமான பணிகள் நிறைவுற்று அதற்கான பரிசோதனை ஆய்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

சென்னையில் அரசாணை வெளியிட்டு திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில் மதுரையிலும் வெகு விரைவில் பரிசோதனை தொடங்கி மிக விரைவில் அந்த கருத்தரிப்பு மையங்கள் இரண்டும் தொடங்கபட உள்ளன. நாட்டிலேயே அரசின் சார்பில் கருத்தரிப்பு மையங்கள் கட்ட எடுக்கப்படுகிற நடவடிக்கை இதுவாகத்தான் இருக்கும். இந்த பணிகள் ஆகஸ்ட் மாத இறுதியில் முடிவடைந்து செப்டம்பர் மாதம் தொடங்கி வைக்கப்படும். ”

இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.