இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி (38) கடந்த 2005-இல் அறிமுகம்
ஆகி, தற்போது வரை சர்வதேச அளவில் 131 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார்.
இந்நிலையில் சர்வதேச அரங்கில், தற்போது விளையாடி வரும் வீரர்களில் அதிக கோல்
அடித்தவர்கள் பட்டியலில் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 117
கோல்களுடனும், அர்ஜென்டினாவின் லியனோ மெஸ்சி 90 கோல்களுடனும் முதல் மற்றும்
இரண்டாம் இடங்களை பிடித்துள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது
இடத்தில் இந்தியாவின் சுனில் சேத்ரி 84 கோல்களுடன் மூன்றாவது இடத்தில்
இருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனை கௌரவிக்கும் வகையில் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ‘பிபா’ சுனில்
குறித்த தொகுப்பு ஒன்றை “சீரிஸ்” ஆக தொகுத்து மூன்று பகுதிகளாக
வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ‘பிபா’ தனது உலக கோப்பை டிவிட்டர் பக்கத்தில்
தெரிவித்துள்ளதாவது “உங்கள் அனைவருக்கும் ரொனால்டோ, மெஸ்சி குறித்து அனைத்தும் தெரியும். அதே சமயம் தற்போதுள்ள வீரர்களில் அதிக கோல் அடித்த மூன்றாவது வீரர் இந்தியாவின் சுனில் சேத்ரி குறித்தும் தெரிந்து கொள்ளலாம்” என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.
அந்த சீரிஸ் பக்கத்தில் முதல் பகுதி, சுனில் சேத்ரியின் தொடக்க கால
வாழ்கையும், அவரது 20 வது வயதில் இந்தியாவுக்காக எப்படி அறிமுகம் ஆனார் என்பது
உள்ளிட்ட விபரங்களும் அடங்கியுள்ளது. அடுத்த பகுதியில் இந்திய அணிக்காக சுனில்
சேத்ரி நிகழ்த்திய சாதனைகள், சர்வதேச அளவில் பல்வேறு கிளப் அணிகளுக்காக
விளையாடியது உள்ளிட்டவைகள் இடம் பெற்றுள்ளது. மூன்றாவது பக்கத்தில் சுனில்
சேத்ரியின் உச்சபட்ச வெற்றிகள், கோப்பைகள் வென்ற தருணம் மற்றும் பல்வேறு
சாதனைகள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது.