இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்ட், டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் மூன்றாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால், இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. முதல் இன்னிங் ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ராபின்சன் 3 விக்கெட்டுகளும், ஆண்டர்சன், கிரேக் ஓவர்டான் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, 290 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் ஒல்லி போப் 81 ரன்களும் கிறிஸ் வோக்ஸ் 50 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் பும்ரா, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும் ஷர்துல், சிராஜ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் 2 வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 20 ரன்களுடனும் கே.எல்.ராகுல் 22 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி 56 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆடி வருகிறது. மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.







