இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக, இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு சுருண்டது.
விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, நாட்டிங்காமில் நேற்று (ஆகஸ்ட் 4 ) தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரண்டாவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான முதல் தொடர் இது என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசியது. இந்திய அணியில், சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோரி பர்ன்ஸும் டொமினிக் சிப்ளேவும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே இந்திய வீரர் பும்ரா, ரோரி பர்ன்ஸை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார். அடுத்து களமிறங்கிய ஜாக் கிராளே, சிப்ளேவுடன் இணைந்தார்.
இந்திய அணி, தனது துல்லியமான பந்து வீச்சால் இங்கிலந்து அணியை திணறடித்தது. பும்ரா, ஷமி ஆகியோர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை நிலைத்து நிற்க விடாமல் வெளியேற்றிக் கொண்டே இருந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணியில், அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் மட்டும் 64 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் யாரும் நிலைக்கவில்லை. இதனால் அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இங்கிலாந்து அணியில் 4 வீரர்கள் டக் அவுட் ஆனார் கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் பும்ரா 4 விக்கெட்டுகளையும் ஷமி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளையும் சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ரோகித் சர்மாவும் கே.எல். ராகுலும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 21 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 9 ரன்களுடனும் கே.எல்.ராகுல் 9 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.