ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்ற ராஜபக்சேவுக்கு இந்தியா
தஞ்சம் அளிக்கக் கூடாது என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இதையடுத்து, ராஜபக்சேவின் ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கிடையே பிரதமர் இல்லத்தைவிட்டு வெளியேறிய ராஜபக்சே குடும்பத்தினர் கடற்படை தளத்திற்கு நேற்று சென்றனர். அதைத்தொடர்ந்து, கடற்படை தளத்தில் போராட்டக்காரர்கள் குவிந்தனர். கடற்படைத் தளத்தில் இருந்து ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியானது.
மேலும், அவர்கள் இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள தகவலில், சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பத்தினரும் இந்தியாவுக்குச் சென்றிருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. இந்தத் தகவல்கள் தவறானவை. இதில், எந்தவித உண்மையும் இல்லை. இந்த செய்திகளை உயர் ஆணையம் மறுக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்துள்ளது.
அடக்குமுறை மற்றும் பொருளாதார சீரழிவுக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பை
தாங்கிக் கொள்ள முடியாத முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது
குடும்பத்தினர் வெளிநாடு தப்ப முயல்வதாகத் தெரிகிறது.
திரிகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியிருந்த ராஜபக்சே இந்தியாவுக்கு தப்பிச்
சென்றுவிட்டதாக வெளியான செய்திகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம்
மறுத்திருக்கிறது. ஆனாலும் கடல் வழியாக அவர் இந்தியாவுக்கு வருவதற்கு அதிக
வாய்ப்புகள் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன!
2009 ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களைப் படுகொலை செய்தவர்கள் ராஜபக்சே
சகோதரர்கள்தான். அவர்களின் போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் திரட்டியுள்ளது. அப்படிப்பட்ட போர்க் குற்றவாளிகளுக்கு இந்தியா
ஒருபோதும் தஞ்சம் அளிக்கக் கூடாது.
போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை ஆதாரங்களின் அடிப்படையில் ராஜபக்சே
சகோதரர்களை கைது செய்து, பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தண்டனை
பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும், பிற உலக நாடுகளும் மேற்கொள்ள
வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.