வடவள்ளி சந்திரசேகருக்குச் சொந்தமான கேசிபி நிறுவன அலுவலகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பரும், அதிமுக எம்.ஜி.ஆர். அணியின் முக்கிய நிர்வாகியுமான வடவள்ளி சந்திரசேகர், அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளராகவும், கேசிபி என்ற தனியார் நிறுவனத்தின் பங்குதாரராகவும் உள்ளார். சந்திரசேகர் அதிமுக ஆட்சிக் காலத்தில் அதிக அளவில் மாநகராட்சிப் பணிகள், ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு பலகோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் எடுத்து அதன் மூலம் பல்வேறு பணிகளை செய்து கொடுத்து வந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் சோதனைகளில் இரண்டு முறை சோதனைகளுக்கு உள்ளானவர் வடவள்ளி சந்திரசேகர். இந்நிலையில், நேற்று சந்திரசேகரின் வீடு மற்றும் அலுவலகம் உள்பட 6 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் அதிரடியான சோதனை நடத்தியிருக்கின்றனர். வடவள்ளி பகுதியிலுள்ள சந்திர சேகர் வீடு உட்பட ஆறு இடங்களில், முற்பகல் 11 மணிக்கு துவங்கிய சோதனை நள்ளிரவு 12.45 மணிக்கு நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து, வருமான வரித் துறை அதிகாரிகள் இரண்டாம் நாளாக சந்திரசேகர் அலுவலகம் மற்றும் கேசிபி நிறுவன அலுவலகத்தில் சோதனையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். வீடுகளில் நடத்தபட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இரண்டாம் நாளாக தொடர்ந்து
நடைபெற்று வரும் சோதனையில் மேலும் ஆவணங்கள் கைப்பற்றப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், வடவள்ளி சந்திரசேகர் மீது வரி ஏய்ப்பு மற்றும் டெண்டர் முறைகேடு உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் இந்த வருமான வரித் துறை சோதனை என்பது கோவையில் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-ம.பவித்ரா