தமிழ்நாட்டில் 2024-25-ம் கல்வியாண்டில் 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து!

தமிழ்நாட்டில் 2024-25-ம் கல்வியாண்டில் 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் 450-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு…

தமிழ்நாட்டில் 2024-25-ம் கல்வியாண்டில் 9 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 450-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் இணையவழி பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

பொறியியல் கல்லூரிகளில் இந்த கல்வியாண்டில் ( 2024 – 2025 ) அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்காக 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவா்கள் இணைய வழியில் விண்ணப்பித்தனர். அவா்களில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதையடுத்து அவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையா் ஜூலை 10ஆம் தேதி வெளியிட்டாா். இதில், 65 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றனா். பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

முதற்கட்டமாக சிறப்பு பிரிவினர், 3,743 பேர் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்கின்றனர். இவர்களில், விளையாட்டு பிரிவினர் 2,112 பேர், மாற்றுத் திறனாளிகள் 408 பேர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 1,223 பேர் உள்ளனர். இன்றும், நாளையும் நடைபெறும் பொறியியல் கலந்தாய்வில் அரசு பள்ளிகளில், 6ஆம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், 387 பேர் பங்கேற்க உள்ளனர்.
மீதமுள்ள மாணவர்களுக்கு வரும், ஜூலை 25 முதல், ஜூலை 27ஆம் தேதி வரை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்பின், வரும் ஜூலை 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை, https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 2024-25 ஆம் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகள் சில மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது போதுமான மாணவர் சேர்க்கை இல்லாதது, உட் கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 9 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுகிறது.

அதன்படி, தமிழ்நாட்டில் 2023 -24ம் கல்வி ஆண்டில் 442 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டன. 2024- 25 கல்வி ஆண்டில் 433 கல்லூரிகள் மட்டுமே மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 11 கல்லூரிகள் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.