பேரூராட்சிகளுக்கு எல்.இ.டி.பல்புகள் வாங்கியதில் ஒரு கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரில் முன்னாள் பெண் உதவி இயக்குநர் உள்ளிட்ட 12 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் முழுவதும் 22 பேரூராட்சிகள் உள்ளது. இதில் தேனியில் உள்ள 11 பேரூராட்சிகளில் கடந்த 2019 -20-ம் ஆண்டுகளில் எல்இடி பல்பு வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி தேனியை சேர்ந்த சரவணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. அதனடிப்படையில், கடந்த 10ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையின் போது கடந்த 2019 -20 ல் பேரூராட்சியில் ஒரு கோடியே 29 லட்சத்து 83 ஆயிரத்து 100 ரூபாய் ஊழல் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த முறைகேடு சம்மந்தமாக உதவி இயக்குனர் விஜயலட்சுமி, ஆண்டிபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணி, தென்கரை பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன், வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், க.புதுபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆண்டவர், உத்தமபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணி, கோம்பை பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி, மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், பூதிப்புரம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், தேவதானப்பட்டிப் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், ஓடைப்பட்டி பேரூராட்சி செயலாளர் பசீர் அகமது ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளுக்கு தேவையான எலக்ட்ரிக் பொருட்களை வழங்கிவரும் கம்பம் புதுப்பட்டியை ஒப்பந்ததாரர் ரவி மற்றும் அவருடைய மனைவி ஜமுனா ஆகிய இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
– இரா.நம்பிராஜன்








