”நான் யார் முதுகிலும் குத்த மாட்டேன்” என டெல்லி செல்லும் முன் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை பிடித்து ஆட்சியை பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி, முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இது தொடர்பாக விவாதிக்க நேற்று எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில் முதலமைச்சர் யார் என்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்ய முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தனித்தனியாக எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்கப்பட்டு, அதன் அடிப்படையில் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் மேலிடத்திற்கு அறிக்கை சமர்பித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் முடிவுகளை காங்கிரஸ் தலைமை அறிவிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
முதலமைச்சர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க கட்சி மேலிடத்தின் அழைப்பை ஏற்று சித்தராமையா டெல்லி சென்றடைந்துள்ளார். அவரைத் தொடர்ந்து டி.கே.சிவக்குமாரும் டெல்லி செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், உடல்நிலை காரணமாக டி.கே.சிவக்குமாரின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பின்னர் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை டி.கே.சிவகுமார் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டி.கே.சிவக்குமார் தெரிவித்ததாவது..
“ காங்கிரஸ் கட்சி எங்களுடைய ஒன்றுபட்ட வீடு, அந்த வீட்டின் எண் 135. இங்கு யாரையும் நான பிரிக்க விரும்பவில்லை. அவர்கள் என்னை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், நான் ஒரு பொறுப்பான மனிதன். யார் முதுகிலும் குத்தவும் மாட்டேன், மிரட்டவும் மாட்டேன்.
சோனியா காந்தி எங்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரி. காங்கிரஸ் கட்சி அனைவருக்குமான ஒரு குடும்பம் போன்றது. நமது அரசியலமைப்பு சட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மக்கள் நலனுக்காக அதனை பாதுகாப்பது மிக அவசியம். அடுத்தகட்டமாக மக்களவைத் தேர்தலில் 20 இடங்களை பெறுவதுதான் எங்களது இலக்கு.
கட்சியின் செயல்பாடுகளில் தலைமை எடுக்கும் முடிவுகளை நான் ஏற்கிறேன். தவறான முன்னுதாரணத்திற்கும், மோசமான வரலாற்றுக்கும் நான் ஒருபோதும் காரணமாக இருக்கமாட்டேன்” என டிகே.சிவக் குமார் தெரிவித்துள்ளார்.