ஒசூரில் பச்சிளம் குழந்தையை கடத்த முயன்ற வடமாநில வாலிபரிடமிருந்து குழந்தையை மீட்ட பொதுமக்கள், அந்த வாலிபரை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஓசூர் அரசனட்டி பகுதியை சேர்ந்தவர் அபிநவ் (30). இவர் அப்பகுதியில் கம்பெனி
ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மனைவி நதியா. இந்த தம்பதிக்கு 7 நாட்களுக்கு முன்பு
பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இன்று நதியாவும் அவரது தாய் வள்ளியும்,
வீட்டின் முன்பு அந்த குழந்தையை வைத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களது வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்த
வடமாநில வாலிபர் ஒருவர் நதியாவின் கையிலிருந்த குழந்தையை பிடுங்க
முயற்சித்துள்ளார். இதனால் அச்சமடைந்த நதியாவும் அவரது தாய் வள்ளியும்
சத்தமிட்டபடி வீட்டிற்குள் நுழைந்துள்ளனர் அப்போதும் விடாமல் அவர்களை துரத்திய அந்த இளைஞர், வீட்டிற்குள் நுழைந்து குழந்தையை அவர்களிடமிருந்து பறிக்க முயன்றார்.
இதனால் பதறிப்போன நதியாவும், அவரது தாயும், கூக்குரலிட்டு சத்தம் போட்டுள்ளனர்
இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நதியாவின் வீட்டிற்கு சென்று குழந்தையை
பறிக்க முயன்ற வடமாநில வாலிபரை பிடித்து அடித்து உதைத்தனர். இதுகுறித்து
தகவல் அறிந்த குழந்தையின் தந்தை அபினவ், ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். விரைந்து சென்ற போலீசார் பொதுமக்களிடமிருந்து அந்த வடமாநில வாலிபரை மீட்டுசிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஒசூர் அரசுமருத்துவமனையில் ஆம்புலன்சில் இருந்து கீழே இறங்க மறுத்த அந்த வாலிபர் தடியால் அனைவரையும் தாக்க பாய்ந்தார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு நின்றவர்கள் அவரை
வலுக்கட்டாயமாக அவசர வார்டுக்கு அழைத்து சென்றனர்.
பச்சிளம் குழந்தையை பறிக்க முயன்ற நபர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்
என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து
சிப்காட் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்து, பச்சிளம் குழந்தையை தாயிடம் இருந்து வடமாநில வாலிபர் பறிக்க முயன்ற சம்பவம் ஓசூர் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







