திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமைக்கான யாத்திரை என்ற பெயரில் இன்று கன்னியாகுமரியில் ராகுல் காந்தி பாத யாத்திரையை தொடங்க இருக்கிறார். கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு 12 மாநிலங்கள் வழியாக 3,500 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்ள இருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் கன்னியாகுமரிக்கு வருகை தரும் ராகுல் காந்திக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியிருந்தார். கோ பேக் ராகுல் என்ற முழக்கத்தோடு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் கன்னியாகுமரிக்கு அவர் ரயிலில் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவையில் இருந்து கன்னியாகுமரிக்கு அர்ஜுன் சம்பத் வந்து கொண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் அர்ஜுன் சம்பத்தை திண்டுக்கல் போலீசார் கைது செய்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
-ம.பவித்ரா