முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்த எஸ்.பி.வேலுமணி மாநகராட்சி பணிகளுக்கான டெண்டர் விடுத்ததில் முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. மேலும் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்சஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனையும் நடைபெற்றது.
இந்நிலையில் தம்மீது தொடரப்பட்டுள்ள டெண்டர் முறைகேடு வழக்கையும், வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக தொடரப்பட்ட வழக்கையும் ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியது. எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காராமன் அமர்வு ரத்து செய்தது. அதே நேரம் சொத்துக் குவிப்பு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று எஸ்.பி.வேலுமணி விடுத்த கோரிக்கையை நிராகரித்த சென்னை உயர்நீதிமன்றம், அது தொடர்பாக எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.







